Thursday, May 16, 2013

* ஒருதலைக் காதல்


ஒருதலைக்காதல் என்பது, ஒரு வகையான வற்புறுத்தல். தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் முறை. மற்றவரை தன் வசப்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சி. இதில் வெற்றியும் கிடைக்கலாம். தோல்வியும் கிடைக்கலாம்
ஒருவர், இன்னொருவரை காதலிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல் ஒருவர், இன்னொருவரை காதலிக்காமல் போகவும் பல காரணங்கள் இருக்கலாம். ஒருதலைக் காதலர்களுக்கு இந்த உண்மை புரியாமல் போவதால், ஒருதலை காதல் ஒரு வன்முறை யாகவே இருந்து கொண்டிருக்கிறது.
 
பல நேரங்களில் இந்த ஒருதலைக்காதலில் ஏற்படும் முடிவுகள் விபரீதமானதாக இருக்கின்றன. காதல் தோல்வியில் ஏற்படும் வலியும் வேதனையும் இந்த ஒருதலை காதல் தோல்வியிலும் ஏற்படும். இது ஒருவருக்கு வேதனையாகவும், மற்றவருக்கு தொந்தர வாகவும் இருக்கும். சமூகம் ஒருதலைக்காதலரை எரிச்சலோடு பார்க்கும். அந்த ஒருதலைக் காதலர் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.
 
இருபக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், இந்த மாதிரியான காதலர்களை பக்கு வமாக கையாள வேண்டும்.
 
ஒருதலைக்காதலை பொறுத்தவரை, `நடந்தால் நடக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும்’ என்று மேம்போக்காக காதலிப்பவர்களும் உண்டு. தன்னை திரும்பிப் பார்த்து தன் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்னொருவர் மீது காதலை திணிப்பவர்களும் உண்டு. தான் விரும்புகிறவர் தன்னை காதலிக்க எந்த முகாந்திரமும் இல்லாத போதும் எப்படியாவது தன் காதல் ஜெயித்து விடாதா என்ற தவிப்புடன் காதலிப்பவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும் ஒருதலைக்காதல் அன்பு நிறைந்ததல்ல! வம்பு நிறைந்தது!
 
ஒற்றை சக்கர வண்டி ஊர் போய் சேராது. அதனால் இந்த ஒருதலைக் காதலை கைவிடுவது நல்லது. அப்படி முடியாத பட்சத்தில் அடுத்தவருக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அமைதியாக இருப்பது காதலுக்கு தரும் மரியாதையாக இருக்கும்.
 
புகழ் பெற்ற ஒரு ஆங்கில நாவல், ஒருதலை காதலின் தியாகத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளாத நாயகி, தனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொள்வாள். அப்போது கதாநாயகன் `என் உண்மை காதலை உணர்ந்து என்றாவது ஒரு நாள் நீ கண்ணீர்விடுவாய். அப்போது தான் என் தூய்மையான காதல் உனக்குப் புரியும்” என்று கூறுவான். கடைசியில் நாயகியின் கணவனை தூக்கிலிருந்து காப்பாற்றிவிட்டு அவனுக்கு பதில் அவன் தூக்கு மேடையேறிவிடுவான். இறுதியில் அந்த ஒருதலைக்காதலனின் கல்லறையில் நாயகி கண்ணீர் விடுவாள். `உன் ஒருதலை காதலுக்கு நான் தரும் அஞ்சலி இந்த கண்ணீர் துளிகள்’ என்று கூறுவதாக கதை முடியும்.
 
இப்படி ஒருதலைக்காதலை தியாகத்தில் முடிக் கும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்? இதை ஒருவிதத்தில் பக்குவமாக எடுத்துக் கொண்டாலும், இன்னொரு கோணத்தில் பார்த் தால் `இந்த ஒருதலைக்காதலிக்காக அவர் தூக்கு கயிற்றில் ஏறி இருக்கவேண்டுமா?’ என்ற கேள்வியும் எழும்.
 
காதல் என்றாலே அது திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. காதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மையாக்கும் அற்புத உணர்வு அது.
 
ஆனால் ஒருதலைக்காதல் மேற்கூறியவைகளுக்கு நேர் எதிராக மாறுகின்றன. தெய்வீகத்திற்கு பதில் வெறியையும், மென்மைக்கு பதில் முரட்டுதனத்தை அது உருவாக் கும்.
 
தான் காதலிக்கும் நபர் தன்னை திரும்பிப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம், ஏமாற்றம், வேதனை, ஒரு பொறுமையற்ற நிலையை மனதில் ஏற்படுத்தி அவர்களை ஒரு “சைக்கோ”வாக மாற்றிவிடும் கொடுமையும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தான் காதலித்த பெண்ணுக்கு நடந்து விட்ட திருமணத்தை சகித்துக் கொள்ள முடியாமல் அவள் தனியாக இருக்கும் நேரத்தில் வம்பு செய்யும் சோகமும் நிகழத்தான் செய்கிறது. இது சமூகத்தை பெருமளவில் பாதிக்கிறது.
 
காதல் என்பது உலகையே வாழ வைக்கும் ஒரு உன்னதம். அது இப்படி பழி பாவத்தில் போய் முடிய இந்த ஒருதலை காதல் காரணமாகக் கூடாது. காதலர் தினம் கொண்டாடும் யுகத்தில் உண்மையான காதல் என்பது என்ன என்பதையும் விளக்கிச் சொல்லி இளைய தலைமுறையை வழி நடத்த வேண்டியுள்ளது.
 
இந்த உலகம் மிகப் பெரியது. ஒருதலைக்காதல் என்ற வட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் இந்த பெரிய உலகத்தை மறந்து விடுகிறார்கள். தான் செய்யத் துணியும் காரியத்தின் எதிர்விளைவுகளைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இருப்பதில்லை. எப்படியாவது போராடி காதலில் வென்றுவிட வேண்டும் அல்லது கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். வேதனையின் விளிம்பிற்கு சென்று தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டவும் செய்கிறார்கள். தற்கொலை செய்து கொள்கிறவர்கள் இந்த மனிதப்பிறவியின் மகத்துவம் புரியாதவர்கள்.
 
இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருதலைக்காதலின் சோகத்தை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுபட வேண்டும். சமூகத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வழிவிட வேண்டும்

No comments:

Post a Comment