Saturday, July 20, 2013

* எது சந்தோஷம்...?


எது சந்தோஷம்...?


எது சந்தோஷம்...? 
ஒவ்வொரு உயிருக்கும் மூலாதாரமே நம்பிக்கைதான். இது நமக்கானது, இது நமக்குக் கிடைக்கும், இதை நம்பலாம், இதுதான் நமக்கு என்ற நம்பிக்கைதான் ஒவ்வொருவரையும்
உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகிறது.

உலகமே ஒரு நாடக மேடை..அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று சொன்ன ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மை. மேலே வானம், கீழே பூமி. இந்த இரண்டும்தான் நிரந்தரம்... அதுவும் கூட இன்னும் 450 கோடி ஆண்டுகள் வரைதான் -சூரியனில் அதற்குப் பிறகு ஹீலியம் தீர்ந்து போய் அண்ட சராசரமும் அழியும் வாய்ப்புள்ளதாம் - அதற்கு இடைப்பட்ட இந்த மனித வாழ்க்கை ரொம்ப சாதாரணமானது. இப்படிப்பட்ட வாழ்க்கையை முடிவு வரை ஓட்ட உதவுவது இந்த நம்பிக்கைதான்.

வாழ்க்கைக்கு மட்டுமல்ல காதலுக்கும் கூட நம்பிக்கை மிகவும் முக்கியம். ஒரு சின்ன இழையளவு கூட அதில் தளர்வு வந்து விடக் கூடாது. மீறி வந்து விட்டால் அந்தக் காதலே உலர்ந்து உதிர்ந்து போய் விடும்.

நீ என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறாய் 
என்னுடைய உலகத்தை நம்பிக்கையால் நிரப்புகிறாய் 
என் வாழ்க்கையை நீ மாற்றிப் போட்டாய் 
உனக்கே தெரியாமல் என்னை நிறைய மாற்றினாய். 
நீ எனக்கு அசாதாரணப் பெண் 
என்னையே எனக்கு உணர்த்தியவள் நீ. 
என்னை விட மதிப்பானவள் நீ 
உன் மென்மையான புன்னகையால் 
என் இதயம் முழுவதையும் இதமாக்குகிறாய் 
உன்னை, உன்னைவிட நான் அதிகம் புரிந்திருக்க 
இந்தக் காதலே காரணம் 
தொடர்ந்து என்னைக் காதலி...!

இப்படியெல்லாம் ஒரு காதலன், உணர்ந்தும், உய்த்தும் சொல்லக் காரணம் அந்தக் காதல் தந்த நம்பிக்கையும் தெம்பும்தான். ஒவ்வொரு காதலும் இப்படித்தான் - நம்பிக்கையையும், நல்ல பல விஷயங்களையும் கூடவே சேர்த்துக் கொடுத்து விட்டுத்தான் போகிறது - அது நீடித்தாலும் அல்லது அல்பாயிசில் முடிந்தாலும்.

எனக்கு எப்போதெல்லாம் மனம் கணத்துப் போகிறதோ 
உன் நினைவு வந்து லேசாக்குகிறது 
எப்போதெல்லாம் எனக்கு இதயம் வலிக்கிறதோ 
அப்போதெல்லாம் நீ வந்து லேசாக்குகிறாய்

இதுவும் காதல் கொடுக்கும் நம்பிக்கைதான்.. காதலின் நினைவும், காதலியின் நினைவும், காதலனின் நினைவும் ஒவ்வொருவருக்கும் மூச்சுக் காற்று போல. எதை வாசிக்க மறுக்கிறோமோ இல்லையோ, நிச்சயம் காதலை சுவாசிக்க யாரும் மறக்க மாட்டார்கள்.

நீ வந்தது என் அதிர்ஷ்டம் 
கைக்குள் வர வேண்டிய அவசியம் கூட இல்லை 
ஏனென்றால் அதையும் தாண்டி என் மனசுக்குள் எப்போதோ வந்து விட்டவள் நீ. 
ஒவ்வொரு நாளும் உன் நினைவாகவே விடிகிறது 
ஒவ்வொரு இரவும் உன் நினைவிலேயே கழிகிறது 
இது போதும் என் தேவதையே...!

அவள் பார்க்கிறாளோ இல்லையோ, அவளுக்குப் புரிகிறதோ இல்லையோ, அவள் வருகிறாளோ இல்லையோ, அது கூட இவனுக்குத் தேவையில்லையாம்.. அவளது நினைவு தரும் அந்த சுகம் போதுமாம்... இதை விட ஒரு பாசிட்டிவான விஷயத்தை வேறு எது தரும், சொல்லுங்கள்...!

ஆதலினால் காதல் செய்யுங்கள்.. ஆயுசைக் கூட்டிக் கொள்ளுங்க

★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
www.facebook.com/NanaparkumUlagem

No comments:

Post a Comment