Thursday, May 16, 2013

* அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!


தம்பதியரிடையேயான பிரச்சினைக்கு மூல காரணமே அன்பை சரியான அளவில் வெளிப்படுத்தாமல் விடுவதுதான். மனதில் டன் கணக்கில் அன்பும், பாசமும் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது வெற்றியின் ரகசியம்.

நான் இங்கே தவிக்கிறேன். அவருக்கு என்மேல அக்கறை இல்லாம இருக்கிறாரே என்று நினைத்தாலே போதும் விரிசலின் விதை ஊன்றப்பட்டு விடும். எனவே ஆண்களே உங்களின் மனைவி மீதான பிரியத்தை ஏதாவது ஒரு விதத்தில் வெளிப்படுத்துங்கள் ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான் என்கின்றனர் நிபுணர்கள். கணவரிடம் இருந்து மனைவி என்ன எதிர்பார்க்கிறார்? அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து மனைவியின் இதய சிம்மாசனத்தில் இடம் பெறுவது எப்படி என்றும் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

நம்பிக்கைதான் வாழ்க்கை
நகை விளம்பரத்தில் சொல்வதைப் போல ‘நம்பிக்கை அதானே எல்லாம்' இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கைக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். எந்த சூழ்நிலையிலும் தன்னை சந்தேகப்படாத தன்மீது முழு அளவில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது மனைவியின் எதிர்பார்ப்பாகும். அதேபோல கணவன் நேர்மையானவனாக, தன்னை ஏமாற்றாதவனாக இருக்கவேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
புரிந்து கொள்ளுங்கள்
பொதுவாகக் கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு முக்கியம். எந்த அளவு புரிந்துணர்வு இருந்தாலும், சந்தேகம் என்பது எப்போதும் வரலாம். அதனால், புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் அதே நேரம், எந்தப் பிரச்சினை மனதில் தோன்றினாலும், தெளிவாக அதைப் பேசி அதற்கான தெளிவான
முடிவைக் காண்பதே இதற்குச் சிறந்த வழி.
உங்கள் மனைவி உங்களது நண்பர் ஒருவருடன் யதார்த்தமாகப் பழகும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவருடன் அன்பாகப் பேசி, நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கின்றீர்கள் என்பதை உணர்த்தி, எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் பேசி, பிரச்சினை இல்லாத ஒரு அழகான வாழ்க்கையைக் கண்ணில் காட்டி, உங்களது மனதில் உள்ள சந்தேகத்தை எடுத்துக் கூறினால், மனைவி அதை எளிதாக புரிந்து கொள்வார். இதைத்தான் பெரும்பாலான மனைவிகளும் எதிர்பார்க்கின்றனர் என்கிறது சர்வே ஒன்று.
திருப்தியான உறவு
குடும்ப உறவுகளுடன் நமக்கு ஏற்படும் அன்பு வேறு தம்பதியரிடையே ஏற்படும் அன்பு வேறு. இந்த அன்பு மற்றைய எல்லா அன்பை விடவும் வேறு பட்டது. பொதுவாக ஆண்களும் பெண்களும் ஒரேயடியாகத் தாம்பத்திய உறவில் திருப்தி காண்பது குறைவு. சிலவேளை கணவன் முதலில் திருப்தி அடையலாம் அல்லது மனைவி முதலில் திருப்தி அடையலாம். இதில் முதலில் திருப்தி அடைந்தவர் மற்ற நபரின் திருப்தி அடையாத நிலையை உணர்ந்தாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும். எனவே உறவின் போது ஆணின் திருப்தியை பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பெண்களையும் கொஞ்சம் பரிவோடு கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் பெண்கள்.
அன்பாய் இருங்களேன்
ஆண்களை விடப் பெண்கள் பொதுவாக ஆரம்பத்தில் போலவே கடைசிவரைத் தனது கணவனிடம் இருந்து அன்பை எதிர் பார்க்கின்றனர். அதே நேரம் சில ஆண்களும் இதை எதிர் பார்க்கின்றனர். இது கடைசிவரை ஒரே மாதிரி இருக்க வாய்ப்புக் குறைவாகவே அமைகிறது.
வேலைப் பளு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மனைவி மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு குறைவாகவே அமைகிறது. மனைவிக்கு ஏதாவது துன்பம் வந்தாலோ, ஒரு நோய் வாய்ப்பட்டாலோ அல்லது அவர்களது உறவினர்களில் யாருக்காவது ஏதேனும் துன்பம் நேர்ந்தாலோ, அவற்றை கணவர் அக்கறையாய் அணுகி ஆறுதல் அளிக்கவேண்டும் என்பது மனைவியின் எதிர்பார்ப்பாகும்.
இடைவெளி வேண்டாமே
தம்பதியரிடையே இடைவெளி ஏற்படாமல் இருக்க மாதத்திற்கு ஒரு நாலாவது இருவரும் சேர்ந்து எங்காவது சென்று சாப்பிடலாம் அப்பொழுது கிடைக்கும் தனிமையில் மனதுவிட்டுப் பேசலாம். எந்தப் பிரச்சினை வந்தாலும் கோபத்தில் வார்த்தைகளை வெளிவிடாமல் இருப்பதோடு, ஆத்திரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கவேண்டும். ஒருவரது உணர்வை மற்றவர் மதித்து, புரிந்து கொண்டு நடக்கலாம். பெண்களின் அன்பான இந்த எதிர்பார்ப்புகளை மதித்து அவற்றிர்க்கு ஏற்ப நடந்து கொள்ளும் கணவரை மனைவிகள் இதய சிம்மாசனத்தில் வைத்து பூஜிப்பார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
நீங்க எப்படி நல்ல கணவரா நடந்துக்கிறீங்களா?

No comments:

Post a Comment