Sunday, September 22, 2013

* தனிமை வாட்டுகிறதா........?


தனிமை வாட்டுகிறதா........?


இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்."Socializing" என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது. 

இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்லது காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார்கள்.

எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இருக்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் என அர்த்தம். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கபட்டிருக்கும் இவர்கள், இனி யாரையும் நம்ப வேண்டாம். மற்றவர்களுடன் இருந்து காயப்படுவதை விட தனியாக நிம்மதியுடன் இருப்பதே மேல் என்ற அளவிற்கு தீர்மானித்திருப்பார்கள்.

இந்த முடிவு நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் கடினமான ஒன்று. எப்போதும் நண்பர்களுடன் இருந்து பழகியவர்களுக்கு தனியாக இருப்பது என்பது கண்ணை‌‌க் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். ஒரே நாளில் வாழ்க்கையே வெறுத்தது போல தோன்றும். இந்த சிக்கலான சூழலில் இருந்து வெளியே வர அதிக மன வலிமையும் சில எளிமையான டிப்ஸும் தேவை... அந்த எளிமையான டிப்ஸ் இதோ...

தனிமையில் இனிமை - நமது அனைவரது வாழ்விலும் ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக தனிமை அதன் சுயரூபத்தை காட்டும். தனியாக இருப்பது ஒரு பெரிய இழப்பல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். தனிமையாக இருக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்வை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் வாழலாம்.

தனிமையை புரிந்துகொள்ளுங்கள் - தனிமையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாமே நம் சந்தோஷத்திற்காக இருப்பது. மற்றொன்று மிக சோகமாக இருக்கும் சமயம் தனிமையில் வாடுவது. இந்த இரண்டாம் வகையான தனிமை படுத்தும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அச்சமயம் நம்மை புரிந்து கொண்டவர்களிடம், ந‌ம்முடைய வேதனைகளை கொட்டித் தீர்ப்பதால் ஓரளவு அந்த தனிமையிலிருந்து விடுபடலாம்.

தனிமையை புறக்கணியுங்கள் - உங்களை போல் தனிமையில் வாடும் வேறு ஒருவரை‌க் கண்டால் அவரிடம், சாதாரணமாக பேச்சு கொடுங்கள். ஒரு சிம்‌ப்பிளான அறிமுகத்திற்கு பின் நலம் விசாரியுங்கள். இப்படி செய்வதானால், உங்களின் புதிய நண்பரை தனிமையின் பிடியிலிருந்து விடு‌வி‌த்‌திருப்பீர்கள். கொஞ்சம் நேரத்திற்கு உங்களைவிட்டும் தனிமை விலகியிருக்கும்.

குடும்பம் கைகொடுக்கும் - உங்கள் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செல‌விடு‌ங்கள். உங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என நீங்கள் எண்ணினாலும், உங்களுக்கு தேவையான அனைத்து சந்தோஷமும் உங்கள் குடும்பத்திலேயே இருக்கலாம்.

தனிமையை வெல்லுங்கள் - தனிமையை மறக்க முயற்சி செய்யுங்கள். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். சிறு வயதிலிருந்து உங்களை கவர்ந்த விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு உபயோகப்படும் வகையில் பொழுதுபோக்கு விஷயங்களை மாற்றி அமையுங்கள்.

இவை அனைத்தையும் விட தனிமையை நொடி பொழுதில் களைய ஒரு வித்தியாசமான, சுவாரஸ்யமான முறை உடனடியாக ஒரு செல்ல‌ப் பிராணி வாங்குவதுதான்.

நாய், பூனை, பறவைகள் என எதுவாக இருந்தாலும் உங்களிடம் இருந்து அன்பு மற்றும் சிறிது அக்கறையை மட்டும் எதிர்பார்க்கும் இவை என்றும் உங்களை மீண்டும் தனிமையில் விடாது என்பது உறுதி.

நான் பார்க்கும் உலகம்


No comments:

Post a Comment