Thursday, June 20, 2013

* காதலர்கள், புதுமண தம்பதிகளுக்கு ஓர் எச்சரிக்கை


காதலர்கள், புதுமண தம்பதிகளுக்கு ஓர் எச்சரிக்கை
இளம் தம்பதிகள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் மிசௌரி பல்கலைகழகத்தில் ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் பயிலும் ஆய்வு மாணவர் ரஸ்ஸல் கிளேட்டனும், ஹவாய் மற்றும் செயின்ட் மேரீஸ் பல்கலைகழக மாணவர்களும் சேர்ந்து ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வு பேஸ்புக் பயன்படுத்தும் 18 முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

அவர்களிடம், எத்தனை நாளைக்கு ஒருமுறை பேஸ்புக்கை பயன்படுத்துவீர்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்கள், பேஸ்புக்கை பயன்படுத்துவதால் தற்போதைய துணையோடு அல்லது முந்தைய துணையோடு என்னென்ன பிரச்னைகள் உருவானது என்பது குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வு முடிவு குறித்து கிளேட்டன் கூறுகையில், பெரும்பாலானவர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களோடு தொடர்பு கொள்ளவதற்குதான் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதில் பலர் தங்களது முன்னாள் துணையின் நட்பை தொடரவும் அதிக அளவில் பேஸ்புக்கை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இதனால் பலரும் தங்களது துணையின் பேஸ்புக்கை கண்காணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது அவர்களிடையே உள்ள நம்பகத்தன்மையை குறைப்பதோடு, பழைய நட்பு குறித்த சர்ச்சைக்கும் காரணமாகிறது.

இது விவாகரத்தை நோக்கி இட்டு சென்றதாகவும் பலர் தெரிவித்தனர். குறிப்பாக காதலர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் போன்ற புதிதாக இணைந்த ஜோடிகளிடம்தான் இந்த பாதிப்பு அதிகம் இருந்தது.

இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால், காதலர்கள் மற்றும் புதுமண தம்பதியினர் பேஸ்புக்கில் நேரத்தை செலவிடுவதை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment